Wednesday 24 November, 2010

அய்யோ! குழந்தைகளின் குத்தாட்டம்

வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு 5 நிமிட இடைவெளியில் வேறு ஒரு சேனலில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அந்த நடனப் போட்டியில் குழந்தைகள் ஆடிய ஆட்டம்.. அடடா! அது ஆட்டமே அல்ல, குத்தாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் குத்தாட்டத்தில் கூட குழந்தைகளின் மழலைத்தனமும், நளினமும் இல்லை.

அவர்களின் வயதைத் தாண்டிய விரசமான பாடல் வரிகளுடன் அவர்கள் ஆடிய விதமும், அந்தப் பாடல் வரிகளுக்குக் காட்டிய எக்ஸ்ப்ரஷ
ன்களும் பார்க்க சகிக்க முடியவில்லை. ஒரு ஆறு, ஏழு வயதுக்கே உரியக் குழந்தைத்தனம் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.

இதில் குழந்தைகளிடம் உள்ளக் குறைகளை விடப் பெற்றோர்களின் குறைகளேப் பெரிதாகத் தெரிந்தது. இது போன்றப் பாடல்களைத் தேர்வு செய்து, அதற்கு நடனப் பயிற்சியும் கொடுத்து, அதை ரசிக்கவும் ஒரு பெற்றோரால் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் அணியும் உடை அதை விடக் கொடுமை. 'கொழுக், மொழுக்' என்று இருக்கும் குழந்தைகளுக்கு கூட அவர்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணியாமல்.... என்னக் கொடுமைங்க இது?

சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு. ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?

போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!"

கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?

கடவுள் சாட்சியா, அக்னி சாட்சியா, பெற்றோர்கள் சாட்சியா, உறவினர்கள் சாட்சியா மற்றும் எல்லோருடைய சாட்சியா (ஷ்ஷ்..அப்பா! ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சாலே ஒரு வார்த்தைக்கு எத்தனை பில்டப் கொடுக்க வேண்டியதிருக்கு..) ஒருத்தருக்கொருத்தர் கையைப் புடிச்சுக் குடும்பம் நடத்தறக் கணவன், மனைவிக்கு அமையாத கெமிஸ்ட்ரி, டான்ஸ் ஆடற சின்னக் குழந்தைங்களுக்குக் கூட அமையறதா சொல்றாங்களே... அதென்ன கெமிஸ்ட்ரி?

விவரம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா!