Tuesday 15 February, 2011

தீரவில்லையா ஆண்பிள்ளை மோகம்!


சமீபத்தில் சிநேகிதி ஒருவரிடம் தொலைபேசியில் பேசினேன். அவ‌ருக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவரின் இருவீட்டுக் குடும்பத்தாரும் சேர்ந்து ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆசையால் தொந்தரவு செய்வதை என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.


இரண்டாவது சிசேரியன் செய்யும்போதே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனையும் சேர்த்து செய்திருக்கலாமே என்று கேட்டேன். ஆனால் அவர், அதற்கு குடும்பத்தார் யாரும் சம்மதிக்கவில்லை என்று வருத்தப்பட்டார். இப்போதே இரண்டு பெண்குழந்தைகள் ஆகிவிட்டது. இவர்களை வள்ர்ப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கும். இன்னும் 'ஆண்பிள்ளை' ஆசையை சொல்லி வேறு தொந்தரவு செய்கிறார்கள். இவர்களை எதுவும் செய்யமுடியாமல் நான் 
தவிக்கிறேன் என்று சொன்னார்.


இப்போதே ஜனத்தொகை நூறு கோடியை எட்டிவிட்ட நிலையில் ஆண்பிள்ளை மோகம் இன்னும் தீராமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். ஆண்பிள்ளை பிறந்தால் எதை அடைந்து விடுகிறார்கள்? பெண்பிள்ளை பிறப்பதால் எதை இழந்துவிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.


ஒரு குடும்பத்தில் முதலில் பிறப்பது ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அது பெண்ணாக பிறக்கும்போது அடுத்தது ஆணாக இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அனைவருக்கும் ஆண் ஒன்று, பெண் ஒன்று இருக்க வேண்டும் என்று ஆசைதான். அது அமையாமல் போனால் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதில் சின்ன சலிப்பும் கூட தொற்றிக்கொள்கிறது.


ஆண்பிள்ளை என்றால் வரவு, பெண்பிள்ளை என்றால் செலவு என்ற காலமெல்லாம் முந்தைய தலைமுறையோடு போய்விட்டது. இன்று நாட்டில் இருக்கும் விலைவாசியில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் தான் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. என்னைப்போலவே என்னுடைய பெண்ணும் கஷ்டப்பட வேண்டாம் என்றுதான் பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தை நம்மைவிட பலமடங்கு சக்தியுடன் எதிர்கொள்ள பழக்கப்படுத்துவது தான் பெற்றோர்களின் கடமை.


படுத்த படுக்கையாகிவிடும் கடைசிக்காலத்தில் (நிர்வாணக் கோலத்தில் கிடந்தால் கூட) நம் தாய், தந்தை, மாமனார், மாமியார் என்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் ஒரு பெண்ணுக்கு இயற்கையாகவே வந்துவிடும். இந்த மன‌நிலை ஆணுக்கு வருவது கடினம். அதையும் மீறி அவர்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவனுடைய மனைவியோ, அக்காவோ, தங்கையோ அவ‌ர்களின் துணை தேவை. இது தெரியாமல் பல பெற்றோர்கள் என் பிள்ளை வந்து கொள்ளி வைத்தால் தான் என்கட்டை வேகும் என்று புலம்புவார்கள்.


அந்த புலம்பல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணின் அரவணைப்பு இருக்கும். அது மகளாகவோ, மருமகளாகவோ, பேத்தியாகவோ அல்லது ஒரு நர்ஸாகவோ கூட இருக்கலாம்.  


அந்த அரவணைப்பைத் தரும் பெண்பிள்ளையை பெற்றெடுத்ததற்காக சந்தோஷ‌ப்படுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு பெண்குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இரண்டு பெண்குழந்தைகளை பெற்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.


ஆண்குழந்தைகளை வரவேற்போம்! 
பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்போம்! 
பெண்குழந்தைகளையும் வரவேற்று 
பெண்ணை பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுவோம்!