Friday, 6 August 2010

மல்லிகை: சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

மல்லிகை: சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

இந்த எச்சரிக்கைகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த சிலர் தெரியாதவர்களுக்குச் சொல்லுங்கள், தெரியாத பலர் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

1.  நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் Expiry date உள்ளது   நமக்குத்தெரியும். அதுபோல் கேஸ் சிலிண்டருக்கும் உள்ளது. அது நம் பலருக்குத் தெரிவதில்லை. சிலிண்டரின் கைப்பிடிக்கு அருகில் குனிந்துப் பார்த்தால் C-08 என்று எழுதியிருக்கும். C - என்பது 3rd Quarter-ஐக் குறிக்கும். 08 என்பது வருடத்தைக் குறிக்கும்.
அதில்
A என்று இருந்தால் 1st Quarter (ஜனவரி - மார்ச் வரை), 
B எனில் 2nd Quarter (ஏப்ரல் - ஜூன் வரை),
C எனில் 3rd Quarter (ஜூலை - செப்டம்பர் வரை),
D எனில் 4th Quarter அதாவது (அக்டோபர் - டிசம்பர்) ஐக் குறிக்கும்.

இப்போது நம்முடைய சிலிண்டரில் B-09 என்று பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தால் அதை ஏப்ரலிலிருந்து ஜூன் 2009 வரைதான் உபயோகிக்க வேண்டும். அதில் expiry date முடிந்து விட்டால் கண்டிப்பாக dealer-ரிடம் கொடுத்து விட வேண்டும்.

2. நாம் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் அனைத்தையும் கவனமுடன் வாங்குவது மிக முக்கியம். அதன் உபயோகத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி?


பாட்டில்களின் அடியில் முக்கோணக் குறியீட்டுடன் நம்பர் இருக்கும். அந்த முக்கோணக் குறியீட்டில்

1 என்று இருந்தால், அது  PET பாட்டில்கள், மினரல் வாட்டர் பாட்டில்கள், ஃப்ரிட்ஜூக்குள் வைக்கும் பாட்டில்கள் வகையைச் சேர்ந்தது. சூடு இல்லாத இடங்களில் வைத்து உபயோகித்தால் 2 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.


2 - ஸ்வீட் பாக்ஸ், ஹோட்டல்களில் உணவுக் கட்டித்தரும் டப்பாக்கள்.


3 - இதில் டயாக்ஸின் என்ற நச்சு வாயு உள்ளது. சூடான பொருளை இதில் வைக்கவே கூடாது.


4 - இது தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜூக்குள் வைத்துப் பயன்படுத்த மட்டுமே ஏற்றது. இதை வாங்காமல் இருப்பது நல்லது.


5 - இந்த வகைப் பிளாஸ்டிக்குகள் ஜூஸ் உறிஞ்சும் ஸ்ட்ராக்கள், பேரீட்சை வைக்கும் டப்பாக்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வகைப் பொருள்களும் வைக்க ஏற்றது. இந்த நம்பரில் உள்ள பாட்டில்கள், டப்பாக்கள் தரமானது.


6 - யூஸ் அண்ட் த்ரோ பாட்டில்கள்.


நம்பர் எதுவுமின்றி வருவதை வாங்காமல் இருப்பது நல்லது.


குழந்தைகளுக்கான பால் பாட்டில் வாங்கும் போது 'BPA FREE' என்று குறிப்பிட்ட பாட்டிலையே வாங்கணுமாம்.
3. வீட்டிற்கு வெளியே ஒவ்வொருப் பொருளை வாங்கும் போதும் Expiry date பார்த்தே வாங்குவோம். ஆனால் புதிதாக வாங்கி வரும் மளிகைப் பொருள்களைப் பிரித்து அப்படியே மிச்சம் இருக்கும் டப்பாக்களில் கொட்டி விடுவதுண்டு. இது மிகவும் தவறு. Expiry date  முடிந்த அந்தப் பொருட்கள் அப்படியே அதில் கலந்து விடும். இதில் மிகவும் கவனம் தேவை.


4. நாம் வாங்கும் பால் பாக்கெட்டுகளிலும் expiry date உள்ளது. ஆனால் பால் வாங்கும் போது அதை நாம் கவனிப்பதேயில்லை. பால் பாக்கெட்டுக்களில் அன்றையத் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தத் தேதியிலிருந்து ஒருநாள்தான் வைத்திருக்க வேண்டும். இதைக் கவனிக்காமல் வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. அதைப் பார்க்காமல் பாலைக் காய்ச்சியதில் பால் திரிந்து விட்டது. வாங்கும் போதே தேதியைப் பார்த்து வாங்குவது நல்லது. இல்லாவிட்டால் கடையிலேயே ஓரிருநாள் வைத்திருந்தப் பாக்கெட்டுகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள்.

5. வீட்டில் உள்ள குப்பைகளை மூடிய dustbin -ல் கவர் போட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். சிலர் வீட்டில் குப்பைத் தொட்டியைத் திறந்தேதான் வைத்திருப்பார்கள், என் அம்மா உள்பட. இது மிகவும் தவறு. அதிலிருந்துதான் கொசுக்கள் நிறைய வரும். dustbin -ல் கவர் போட்டு உபயோகிப்பதால் அதைக் கழுவுவதும் எளிது. எத்தனையோ தேவையில்லாத செலவுகளுக்கிடையில் இதற்காகவும் கொஞ்சம் செலவிடுவதில் தவறில்லை.

6. வெளியிடங்களில் கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! 

Trial Room  இல்லாதக் கடைகள் இப்போது இல்லை. இதில் ஆளுயரக் கண்ணாடிகள் இருக்கும். சில இடங்களில் அதைத் தவறாக உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள். அது டபுள் மிரராக இருக்கும். அதாவது, நம் உருவம் கண்ணாடியின் மறுபக்கத்திலும் தெரியக்கூடிய வகையில் இருக்கும்.

இதை எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடியில் நம் விரலைத் திருப்பி ஒட்டி வைத்துப் பார்த்தால் சாதாரணக் கண்ணாடியில் நம்முடைய நகம் தெளிவாகத் தெரியும். ஆனால் டபுள் மிரரில் நம் நகம் தெளிவாகத் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாடியில் பெண்கள் உடை மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு மாற்றுவது நல்லது. இல்லையென்றால் நம் உருவம் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு.   கடையில் மட்டுமல்ல, வீட்டிலும் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதால் இரவில் உடை மாற்றும் போது லைட்டை ஆஃப் செய்து விட்டு மாற்றுவது நல்லது.

ஆபத்துக்கள் நிறைந்த உலகில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!

Tuesday, 3 August 2010

குட்டி தேவதைகள்

என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பல குழந்தைகள் ஒரு நிமிடப் பார்வையில் கடந்து சென்றவர்கள். சிலர் மனதில் அப்படியே தங்கி விட்டார்கள். ஆம்! அவர்கள் எல்லாம் எனக்கு குட்டி தேவதைகள்தான்! என்னால் மறக்கவே முடியாத முகங்கள் இவர்கள். இதோ இந்தக் குட்டித் தேவதைகளைப் பற்றி.........




ஸ்டெல்லா மேரி

இவள் என் சம வயதுக் குழந்தை. நான் 3வது அல்லது 4வது படிக்கும் போது என்னுடையத் தோழியாக இருந்தவள். அவளின் அந்தக் குழந்தை முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. இரட்டைப் பின்னலில் மிக அழகாக இருப்பாள். அவளுக்கு நான் யாருடன் பேசினாலும் பிடிக்காது. அவளிடமே பேச வேண்டும். அவளிடம் மட்டும்தான் விளையாட வேண்டும். எப்போதும் என் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கு அரசு உத்யோகம் என்பதால் வேறு ஊருக்கு மாற்றாலாகிப் போய் விட்டோம். ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே ஊரில், நான் படித்த அதே ஸ்கூலில் அவளைப் பார்த்தேன். நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த சிறு வயது முகம் கொஞ்சம் கூட அவள் முகத்தில் இல்லை. "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டேன். "ம்... இருக்கிறது" என்ற ஒற்றை வரியுடன் முடித்துக் கொண்டாள். அவள் நன்றாக மாறி விட்டாள். இந்த இடைவெளியில் அவளுக்கும், எனக்கும் வேறு வேறு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனாலும் ஏனோ எனக்கு அவளின் குழந்தை முகம் மறக்கவே இல்லை.

மீரா

என் மனதை மிகவும் கவர்ந்தவள். நான் 8வது படிக்கும் போது 4 வயது குழந்தையாக அறிமுகமானாள். நான் ஸ்கூல் விட்டு வந்ததும் என்னைத் தேடி ஓடி வந்து விடுவாள். என் கூடவே சாப்பிடுவாள், என்னுடனேயே தூங்குவாள். நானும் அந்தச் சின்ன வயதிலேயே எல்லாத் தேவைகளையும் செய்வேன். "அக்கா, அந்தக் கதை சொல்லட்டுமா?", "இப்படிச் செய்யட்டுமா?" என்று அந்த வயதிற்கே உரிய மழலை மொழியில் பேசிக் கொண்டே இருப்பாள். அவளை என் கூடவே வைத்திருப்பதில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு அசவுகரியங்கள் இருந்ததால் என்னைத் திட்டுவார்கள். எங்கே அவளையும் திட்டி விடுவார்களோ என்று என் பக்கத்திலேயே வைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மாவுக்கு நான் என்றால் கொள்ளைப் பிரியம். "நீயே ஒரு குழந்தை. ஆனாலும் நீதான் என் குழந்தைக்கு முதல் அம்மா" என்று பெருமையுடன் சொல்வார். இப்போது அவள் நன்றாக வளர்ந்து விட்டாள். திருமணம் கூட முடிந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். வளர்ந்த பிறகு அவளைப் பார்க்கும் சந்தர்ப்ப்ங்கள் அமையவே இல்லை. ஆனாலும் ஏனோ குழந்தையாக மனதில் அப்படியே தங்கி விட்டாள்.


ஏஞ்சலின்

அப்பாவுக்காக கொடுக்கப்பட்ட குவார்ட்டஸில்தான் குடியிருந்தோம். அப்போது நாங்கள் இருந்த முதல் மாடியின் நேரெதிரே உள்ள வீட்டின் பால்கனியில் எட்டிப் பார்ப்பாள் ஏஞ்சலின். நான் பால்கனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது அவள் என்னைப் பார்த்து வெட்கப்பட்டு ஓடிவிடுவாள். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரின் கலவை அவள். உண்மையிலேயே அவள் குட்டி ஏஞ்சல்தான். அவள் அம்மா, "அவள் யாரிடமும் பழகமாட்டாள், பேச மாட்டாள்" என்று என் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுவார். அதனால் அவளை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவள் பால்கனியில் எட்டி, எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுவாள். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் லீவில் வருவான். அவனும், நானும் பால்கனியில் பேசிக்கொண்டிருந்த போது ஏஞ்சலின் எட்டிப் பார்த்தாள். என் அண்ணன் "யார் இந்தக் குட்டிப் பொண்ணு?" என்று அவளுக்கு நிறைய சேட்டைகளைச் செய்துக் காண்பித்தான்.அவளுக்கு அண்ணனுடைய சேட்டைகள் மிகவும் பிடித்தது. ஏனோ அவனிடம் மட்டும் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு 31/2 வயதுதான். அண்ணா இல்லாத நேரத்தில் "பெகாஷ் அண்ணா (என் அண்ணன் பிரகாஷைத் தான் அப்படி சொல்வாள்) எங்க?, "பெகாஷ் அண்ணா எப்ப வருவாங்க? என்று என் அண்ணனைப் பற்றிக் கேட்பதற்காகவே என்னுடன் பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நாள்தான் பழகி இருப்பாள். அதற்குள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துவிட்டது. ஆனாலும் அந்தப் பால்கனியில் எட்டிப் பார்க்கும் அந்தக் குட்டி ஏஞ்சல் முகம் மனதில் இருந்து நீங்கவே இல்லை.



ரிஜுதா

என் உயிரில் கலந்து விட்ட என் குழந்தை.  நான் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவள். ஒரு சிநேகிதியைப் போல் என்னைத் திட்டுகிறாள், சண்டை போடுகிறாள். தாயைப் போல் என்னைத் தேற்றுகிறாள். எந்த ஒரு கஷ்டமும் அவளைப் பார்க்கும் பொழுது தவிடு பொடியாகிறது. அவளுக்காகவே இன்னும் கஷ்டங்களைத் தாங்குவேன், என்றும் அவளுக்காகவே நிறைய ஆண்டுகள் வாழ்வேன். Riju " I love you ..da"



ஸ்ரீநிகிதா

என் அண்ணனின் மகள். இவளைப் பார்ப்பவர்கள் எல்லோரும் "இவள் ஏன் இப்படித் தேறாமல் இருக்கிறாள்?" என்றுதான் கேட்பார்கள். ஆனால் அந்த ஒல்லியான உடம்பில் செய்யும் சேட்டைகளில் தான் என்னை ரசிக்க வைக்கிறாள். மிகவும் பாசமானவள். இவள் என் மனதில் மருமகளாக இல்லை, மகளாகத்தான் நிறைந்திருக்கிறாள்.



நேஹா

பெயரிலேயே கவர்ந்து விடுகிறாள். அவள் பிறந்த மாதத்திலும் என்னைக் கவர்ந்து விட்டாள். கண்கள் மலரச் சிரிக்கிறாள், அழும்போதும் ரசிக்க வைக்கிறாள். அவளைப் பார்க்கும்போது சிரிக்க வைக்கவும் தோன்றுகிறது, அழுவதை ரசிப்பதற்காகவே சீண்டிப் பார்க்கவும் தோன்றுகிறது. Neha kutti,  u r so cute!



சிந்து (Riju's Friend)

சிரித்த முகத்துடன், ரிஜுவுக்கு மட்டுல்ல என்னையும் கூப்பிட்டு டாட்டா காட்டுவாள். ஸ்கூலுக்குப் போனால் எங்கிருந்தாலும் என்னைப் பார்த்து ஓடி வந்துவிடுவாள். நாலு வார்த்தையாவது பேசாமல் நகர மாட்டாள். வேனில் செல்லும்போது டாட்டா காட்டிக் கொண்டே செல்வது அழகு.



ப்ரார்த்தனா (Riju's Friend)

மறக்க நினைத்தாலும் முடியாத முகம். பேசவே மாட்டாள். சிரித்தே கவிழ்த்து விடுவாள்.


இவர்கள் எனக்குக் கிடைத்தக் குட்டி தேவதைகள் மட்டுமல்ல, என் குட்டிக் காதலிகளும் கூட!

Thursday, 29 July 2010

அன்றும், இன்றும் (ஆண்மனம்)

அன்று
"நீ பேசறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"நீ வாயைத் தொறந்தாலே எரிச்சலா இருக்கு"


அன்று
"உன் கூட இருந்தா நேரம் போறதே தெரியல"
இன்று
"உன் கூட இருக்கிற ஒவ்வொரு நேரமும் நரகமா இருக்கு"

அன்று
"உன் கையால சமைச்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்"
இன்று
"இத மனுஷன் சாப்பிடுவானா?"

அன்று
"வாழ்நாள் பூரா உன் கூடவே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"சீக்கிரம் உன் அம்மா வீட்டுக்குப் போ!"

முரண்பட்டது ஆண்மனம்!
புண்பட்டதென்னவோ பெண்மனம்தான்!

Tuesday, 27 July 2010

குழந்தை கற்றுத் தந்த பாடம்

கோபம்! சில மாதங்களுக்கு முன்பு வரை, நன்கு பழகியவர்களுடன் உரிமையுடன் கத்தியும், அதிகம் பழகாதவர்களுடன் மிக அமைதியாகவும் கோபத்தை வெளிப்படுத்தும் இயல்புடன் இருந்தவள் நான். ஆனால் அந்தக் கோபம் கூட சிறுபிள்ளைத்தனமானது என்று உணர வைத்தவள் என் குழந்தை.

ஏதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் இருக்கும் கதையை சொல்லித் தா என்று நச்செரித்துக்கொண்டே இருப்பாள். ஒருநாள் உடல் வலியும், தீராத தலைவலியும் சேர்ந்து என்னை பாடாய்படுத்த, அவள் செய்யும் சேட்டைகளை தாங்க முடியாமல் நன்றாக திட்டி முதுகில் ரெண்டு போடு போட்டேன். கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தவள், சிறிது நேரம் கழித்து கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். "அம்மா, இந்த கதையை சொல்லித் தாம்மா" என்று கேட்டாள்.

தலைவலி மண்டையைப் பிளக்க, "எப்ப பாத்தாலும் கதை, கதைன்னு பாடாய்ப்படுத்துவ. பேசாம போ" என்றேன் கோபமாக. "அம்மா, ப்ளீஸ்மா... சொல்லித் தாம்மா" என்று கெஞ்சினாள். எரிச்சலுடன் "சரி வா" என்று அவள் கொடுத்த கதையை படிக்க ஆரம்பித்தேன்.

அந்தக் குழந்தையின் பெயர் வர்ஷா. அவளுக்கு தாய் இல்லை. அப்பாவிடம் வளர்ந்தாள். தாயில்லாததால் வர்ஷாவை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார் அப்பா. ஒருநாள் வர்ஷா தனது பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, பென்சில் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், "பேப்பரைக் கிழிப்பியா...?" என்று கோபத்துடன் திட்டி புத்தகத்தை பிடுங்கி வைத்தார். சிறிது நேரத்தில் அப்பாவிடம் வந்த வர்ஷா, கண்களில் பயத்தோடு கலர் பேப்பர் ஒட்டப்பட்ட ஒரு பரிசுப் பொருளை தன் அப்பாவிடம் கொடுத்து, " ஹாப்பி ப்ர்த் டே டாடி" என்றாள். "தாங்க்யூ" என்று சொல்லியபடியே பரிசைப் பிரிக்க, அதற்குள் ஒரு காலியான பென்சில் பாக்ஸ்!

அவருக்கு வர்ஷாவின் இந்த ஏமாற்றும் விளையாட்டு பிடிக்கவில்லை. "யாரையும் ஏமாற்றி இப்படி விளையாடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? வீட்ல இருக்கிற பழக்கம்தான் வெளியிலேயும் வரும்" என்று அவர் மீண்டும் கோபத்தில் வெடிக்க, அப்பாவின் இந்த ரியாக்க்ஷனை எதிர்பாராத வர்ஷாவின் கண்களில் மளமளவென நீர் வழிய... "அது காலி பாக்ஸ் இல்லை டாடி. அதுல உங்களுக்கு நான் 100 கிஸ்ஸஸ் வச்சிருக்கேன்! நல்லாப் பாருங்க!" என்று வர்ஷா அழுது கொண்டே சொன்ன போது, அவள் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் தவறை உணர்ந்தவர் தரையில் மண்டியிட்டு, "ஸாரிடா" என்றார்.


கதையைப் படித்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன் என் குழந்தையை. "என்னம்மா, எவ்வளவு நேரமா கதையைப் படிச்சிக்கிட்டே இருப்ப... சீக்கிரம் சொல்லித் தாம்மா.. சொல்லித் தர்ரியா?" என்று கேட்டாள் வெகுளித்தனமாக. என் குழந்தையின் பிஞ்சுக் கால்களில் முத்தமிட்டேன்.
"என்னம்மா... என் கால் உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கா... முத்தம் கொடுக்கிற!" புரியாமல் கேட்டாள் குழந்தை.
"ஸாரிம்மா... செல்லம்.."
"சே....ரி....ம்மா.... அம்மா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.." என்று என்னைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

இப்போது யார் மீது கோபம் வந்தாலும் இந்தக் கதையைப் படிக்கக் கொடுத்த என் குழந்தை முகம்தான் நினைவுக்கு வரும். அப்போது அந்தக் கோபத்தையும் எதிர்கொள்ள பழகிக்கொண்டேன் ஒரு சின்ன புன்னகையுடன்.