Tuesday 3 August, 2010

குட்டி தேவதைகள்

என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பல குழந்தைகள் ஒரு நிமிடப் பார்வையில் கடந்து சென்றவர்கள். சிலர் மனதில் அப்படியே தங்கி விட்டார்கள். ஆம்! அவர்கள் எல்லாம் எனக்கு குட்டி தேவதைகள்தான்! என்னால் மறக்கவே முடியாத முகங்கள் இவர்கள். இதோ இந்தக் குட்டித் தேவதைகளைப் பற்றி.........




ஸ்டெல்லா மேரி

இவள் என் சம வயதுக் குழந்தை. நான் 3வது அல்லது 4வது படிக்கும் போது என்னுடையத் தோழியாக இருந்தவள். அவளின் அந்தக் குழந்தை முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. இரட்டைப் பின்னலில் மிக அழகாக இருப்பாள். அவளுக்கு நான் யாருடன் பேசினாலும் பிடிக்காது. அவளிடமே பேச வேண்டும். அவளிடம் மட்டும்தான் விளையாட வேண்டும். எப்போதும் என் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கு அரசு உத்யோகம் என்பதால் வேறு ஊருக்கு மாற்றாலாகிப் போய் விட்டோம். ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே ஊரில், நான் படித்த அதே ஸ்கூலில் அவளைப் பார்த்தேன். நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த சிறு வயது முகம் கொஞ்சம் கூட அவள் முகத்தில் இல்லை. "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டேன். "ம்... இருக்கிறது" என்ற ஒற்றை வரியுடன் முடித்துக் கொண்டாள். அவள் நன்றாக மாறி விட்டாள். இந்த இடைவெளியில் அவளுக்கும், எனக்கும் வேறு வேறு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனாலும் ஏனோ எனக்கு அவளின் குழந்தை முகம் மறக்கவே இல்லை.

மீரா

என் மனதை மிகவும் கவர்ந்தவள். நான் 8வது படிக்கும் போது 4 வயது குழந்தையாக அறிமுகமானாள். நான் ஸ்கூல் விட்டு வந்ததும் என்னைத் தேடி ஓடி வந்து விடுவாள். என் கூடவே சாப்பிடுவாள், என்னுடனேயே தூங்குவாள். நானும் அந்தச் சின்ன வயதிலேயே எல்லாத் தேவைகளையும் செய்வேன். "அக்கா, அந்தக் கதை சொல்லட்டுமா?", "இப்படிச் செய்யட்டுமா?" என்று அந்த வயதிற்கே உரிய மழலை மொழியில் பேசிக் கொண்டே இருப்பாள். அவளை என் கூடவே வைத்திருப்பதில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு அசவுகரியங்கள் இருந்ததால் என்னைத் திட்டுவார்கள். எங்கே அவளையும் திட்டி விடுவார்களோ என்று என் பக்கத்திலேயே வைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மாவுக்கு நான் என்றால் கொள்ளைப் பிரியம். "நீயே ஒரு குழந்தை. ஆனாலும் நீதான் என் குழந்தைக்கு முதல் அம்மா" என்று பெருமையுடன் சொல்வார். இப்போது அவள் நன்றாக வளர்ந்து விட்டாள். திருமணம் கூட முடிந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். வளர்ந்த பிறகு அவளைப் பார்க்கும் சந்தர்ப்ப்ங்கள் அமையவே இல்லை. ஆனாலும் ஏனோ குழந்தையாக மனதில் அப்படியே தங்கி விட்டாள்.


ஏஞ்சலின்

அப்பாவுக்காக கொடுக்கப்பட்ட குவார்ட்டஸில்தான் குடியிருந்தோம். அப்போது நாங்கள் இருந்த முதல் மாடியின் நேரெதிரே உள்ள வீட்டின் பால்கனியில் எட்டிப் பார்ப்பாள் ஏஞ்சலின். நான் பால்கனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது அவள் என்னைப் பார்த்து வெட்கப்பட்டு ஓடிவிடுவாள். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரின் கலவை அவள். உண்மையிலேயே அவள் குட்டி ஏஞ்சல்தான். அவள் அம்மா, "அவள் யாரிடமும் பழகமாட்டாள், பேச மாட்டாள்" என்று என் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுவார். அதனால் அவளை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அவள் பால்கனியில் எட்டி, எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுவாள். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் லீவில் வருவான். அவனும், நானும் பால்கனியில் பேசிக்கொண்டிருந்த போது ஏஞ்சலின் எட்டிப் பார்த்தாள். என் அண்ணன் "யார் இந்தக் குட்டிப் பொண்ணு?" என்று அவளுக்கு நிறைய சேட்டைகளைச் செய்துக் காண்பித்தான்.அவளுக்கு அண்ணனுடைய சேட்டைகள் மிகவும் பிடித்தது. ஏனோ அவனிடம் மட்டும் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு 31/2 வயதுதான். அண்ணா இல்லாத நேரத்தில் "பெகாஷ் அண்ணா (என் அண்ணன் பிரகாஷைத் தான் அப்படி சொல்வாள்) எங்க?, "பெகாஷ் அண்ணா எப்ப வருவாங்க? என்று என் அண்ணனைப் பற்றிக் கேட்பதற்காகவே என்னுடன் பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நாள்தான் பழகி இருப்பாள். அதற்குள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துவிட்டது. ஆனாலும் அந்தப் பால்கனியில் எட்டிப் பார்க்கும் அந்தக் குட்டி ஏஞ்சல் முகம் மனதில் இருந்து நீங்கவே இல்லை.



ரிஜுதா

என் உயிரில் கலந்து விட்ட என் குழந்தை.  நான் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவள். ஒரு சிநேகிதியைப் போல் என்னைத் திட்டுகிறாள், சண்டை போடுகிறாள். தாயைப் போல் என்னைத் தேற்றுகிறாள். எந்த ஒரு கஷ்டமும் அவளைப் பார்க்கும் பொழுது தவிடு பொடியாகிறது. அவளுக்காகவே இன்னும் கஷ்டங்களைத் தாங்குவேன், என்றும் அவளுக்காகவே நிறைய ஆண்டுகள் வாழ்வேன். Riju " I love you ..da"



ஸ்ரீநிகிதா

என் அண்ணனின் மகள். இவளைப் பார்ப்பவர்கள் எல்லோரும் "இவள் ஏன் இப்படித் தேறாமல் இருக்கிறாள்?" என்றுதான் கேட்பார்கள். ஆனால் அந்த ஒல்லியான உடம்பில் செய்யும் சேட்டைகளில் தான் என்னை ரசிக்க வைக்கிறாள். மிகவும் பாசமானவள். இவள் என் மனதில் மருமகளாக இல்லை, மகளாகத்தான் நிறைந்திருக்கிறாள்.



நேஹா

பெயரிலேயே கவர்ந்து விடுகிறாள். அவள் பிறந்த மாதத்திலும் என்னைக் கவர்ந்து விட்டாள். கண்கள் மலரச் சிரிக்கிறாள், அழும்போதும் ரசிக்க வைக்கிறாள். அவளைப் பார்க்கும்போது சிரிக்க வைக்கவும் தோன்றுகிறது, அழுவதை ரசிப்பதற்காகவே சீண்டிப் பார்க்கவும் தோன்றுகிறது. Neha kutti,  u r so cute!



சிந்து (Riju's Friend)

சிரித்த முகத்துடன், ரிஜுவுக்கு மட்டுல்ல என்னையும் கூப்பிட்டு டாட்டா காட்டுவாள். ஸ்கூலுக்குப் போனால் எங்கிருந்தாலும் என்னைப் பார்த்து ஓடி வந்துவிடுவாள். நாலு வார்த்தையாவது பேசாமல் நகர மாட்டாள். வேனில் செல்லும்போது டாட்டா காட்டிக் கொண்டே செல்வது அழகு.



ப்ரார்த்தனா (Riju's Friend)

மறக்க நினைத்தாலும் முடியாத முகம். பேசவே மாட்டாள். சிரித்தே கவிழ்த்து விடுவாள்.


இவர்கள் எனக்குக் கிடைத்தக் குட்டி தேவதைகள் மட்டுமல்ல, என் குட்டிக் காதலிகளும் கூட!