Monday 30 August, 2010

கவனமுடன்....

ஒருநாள் நானும், எனது கணவரும் குழந்தைக்கு ரெயின் கோட் வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்றிருந்தோம். ரெயின் கோட் வாங்கிவிட்டு வெளியில் வந்தவுடன், கடைக்கு வெளியே ஸ்வீட் கார்ன், கலர் கலராக ஜூஸ் எல்லாம் வைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குக் கலர் ஜூஸ் வேண்டும் என்று அழுது அடம்பிடித்தாள் என் குழந்தை. எவ்வளவு தான் சமாதானம் செய்தாலும் முடியவில்லை.


"எனக்குப் பசிக்குதும்மா, ப்ளீஸ்மா" என்று அவள் கெஞ்சியதைப் பார்த்தவுடன் பாவம் என்று இரக்கப்பட்டு வாங்கினேன். அவள் கையில் இன்னும் நான் கொடுக்கவில்லை. கையில் இருப்பதைப் பிடுங்கத்தான் பார்த்தாள்.

என் கணவர் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கும்போது, கையில் வைத்திருந்த ஜூஸை யதேச்சையாகப் பார்த்தேன். பார்க்கும் போதுதான் தெரிந்தது, அதன் எக்ஸ்பையரி டேட் முடிந்து ஒரு மாதம் ஆகிறது என்று. சரி, வேறு பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்றுப் பார்த்தால் வரிசையாக எல்லா பாட்டிலிலும் ஒரே டேட் தான் இருந்தது.

அதிர்ச்சியாக என் கணவரிடம் காட்டினேன். அவர் கடைக்காரனிடம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான். என் கணவர் காசைத் திருப்பிக் கேட்டார். அதற்குள் என் குழந்தை வேறு ஒரு பாட்டிலை எடுத்துப் பிரித்து விட்டாள். அவள் பிரித்ததை வைத்துக் கடைக்காரன் பிரச்சினை செய்தான். என் கணவர் கோபமாக என் குழந்தைக் கையில் வைத்திருந்த பாட்டிலைப் பிடுங்கி கடைக்காரன் கண்முன்னேத் தூக்கி எறிந்து விட்டார்.

"இதெல்லாம் ஏன் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கிறே?" என்று எனக்குத்தான் திட்டு விழுந்தது. அந்த இடத்தை விட்டுக் கிளம்பும் போது, அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த ஜூஸை வாங்கிக் கொண்டே இருந்தார்கள். யாருமே அந்தப் பாட்டிலைக் கவனிக்கவே இல்லை. என் கணவர் திட்டியது கூட எனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால் யாருமே இந்த மாதிரி விஷயங்களைக் கவனிக்காமல் இருந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

"இப்படி ஏமாத்துறாங்களே. நான் வேணுன்னா அவங்ககிட்ட சொல்லிட்டு வரவா?" கணவரிடம் கேட்டேன். அதற்கும் திட்டு விழுந்தது.

"அவனுக்கென்ன அக்கறை? வாங்கிக் குடிப்பவர்களுக்குத்தான் அறிவு வேண்டும்." என்று சொன்னார் என் கணவர்.

என்ன சொல்லணும்னு தெரியாமல் முழித்தேன்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில்  அனைவரும் கவனமாக இருக்கத்தான் இதை எழுதுகிறேன். (முக்கியமாகக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு)