சிறுவயதில் அம்மா ஆக்ரோஷமாக அடித்துத் திட்டும்போது
நினைத்துக் கொண்டேன்
அம்மா கோபப்படும்போது அசிங்கமாக இருக்கிறாள்
நான் அப்படி இருக்க மாட்டேன்
எல்லாரிடமும் பொறுமையாகப் பேசி அழகாக இருப்பேன் என்று.
வலி தாங்காமால் அழும்போது நினைத்துக் கொண்டேன்
யாரையும் இப்படி அடிக்கக் கூடாது அவர்களுக்கும்
இவ்வளவு வலிக்குமே என்று.
கொஞ்சம் வளர்ந்தவுடன் ஏதோ ஒரு நேரத்தில்
அப்பாவும், அம்மாவும் சண்டைபோட்டு
வார்த்தைகளை வீசி வருந்தும் போது
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரிடமும் காயப்படுத்தும் வார்த்தைகளைப்
பேசக்கூடாது என்று.
படிக்கும் வயதில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று
டிபன் பாக்ஸில் உள்ளதை மொத்தமாகக் கொட்டிவிட்டு
மெத்தனமாக திரும்பி வரும்போது
யாரோ "அம்மா, சாப்பிட்டு மூணு நாளாச்சு..
ஏதாச்சும் தர்மம் பண்ணும்மா" என்று சொல்வது
காதில் விழ அப்போதே மனதில் நினைத்துக் கொண்டேன்
சே! இந்த சாப்பாட்டை வீணாக்குவது
எவ்வளவு தவறு என்று.
அவசரத்தில் ஒரு பேனா, பென்சிலைக் கூட
சக தோழிகளுக்குத் தர மனமில்லாமல்
உதாசீனப்படுத்தும் மற்ற தோழிகளைப் பார்த்து
மனதில் நினைத்துக் கொண்டேன்
நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக்
கொடுக்க வேண்டும் என்று.
யாராவது ஒருவரைப் பற்றி குறை சொல்லிப்
புலம்புவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு
அதை அவர்களிடமே எடக்குமடக்காகப் போட்டுக்கொடுத்து மாட்டிவிடும்
என் கணவரைப் பார்த்து மனதில் நினைத்துக் கொண்டேன்
யாரைப்பற்றியும் குறை சொல்லக்கூடாது என்று.
கெட்ட வார்த்தை பேசுவதால் கடுமையாகக் கண்டித்து விட்டு வருத்தப்படும்போது இனி அப்படி பேச மாட்டேன்மா
என்று உடனே கோபத்தை மறந்து கட்டிக்கொள்ளும்
குழந்தையின் இயல்பைப் பார்த்து
மனதில் நினைத்துக் கொண்டேன்
யாருடையக் கோபத்தையும் உடனே மறந்து விடும்
இந்த குழந்தை மனதுடன் இருக்க வேண்டும் என்று.
நான் வாழ்க்கையில் பக்குவப்பட
இத்தனை பேர் உதவியிருக்கிறார்களே
என்று ஆச்சர்யப்படும் வேளையில்
நான் வாழ்நாள் முழுவதும் பக்குவப்பட
இன்னும் எத்தனைப் பேரை
சந்திப்பேன்? காத்திருக்கிறேன் ஆவலுடன்!