Wednesday 15 September, 2010

ஸ்வர்ணலதாவின் நினைவாக....

பாடகி ஸ்வர்ணலதா மறைவு!



இந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. "மாலையில் யாரோ மனதோடு பேச.." என்று பாடிய அந்த வசீகரக் குரலில் மயங்காதவர்கள் யாராவது உண்டா?

ஸ்வர்ணலதாவின் குரலைக் கேட்பதற்கு முன்பு, உனக்கு மிகவும் பிடித்தப் பாடகர் யார்? என்று கேட்டால் உடனே நான் சொல்வது எஸ்.பிபியையும், சித்ராவையும் தான். அவர்கள் எனக்கு இன்னமும் பிடித்தப் பாடகர்களாக இருந்தாலும் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் பிடித்தது ஒரு தனிக்கதை.

அவர் பாடி எனக்குப் பிடித்த பாடல்கள்;

"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட.." - உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்

"அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே.." - மேட்டுக்குடி

"கண்ணாடி சேல கட்டி.." - சார்லி சாப்ளின்


"மல்லிக மொட்டு மனசத் தொட்டு.." - ?

"ஊரடங்கும் சாமத்திலே..." - புதுப்பட்டி பொன்னுத்தாயி

"குயில் பாட்டு ஹோ.." - என் ராசாவின் மனசிலே

"ஆத்தோரம் தோப்புக்குள்ள..." - ?

"கானக்கருங்குயிலே கச்சேரிக்கு..." - பாண்டித்துரை

"காதலா காதலா..." - சூரிய வம்சம்

"மெல்லிசையே.. என் இதயத்தின்.." - மிஸ்டர் ரோமியோ

"காலையில் கேட்டது கோயில் மணி.." - செந்தமிழ்ப்பாட்டு

இன்னும் நிறைய. இந்தப் பாடல்களை எல்லாம் கேட்ட ஆரம்பத்தில் இதை ஸ்வர்ணலதாதான் பாடினார் என்று எனக்குத் தெரியாது. ஆஹா! இந்தப் பாடல் கேட்பதற்கு இவ்வளவு நன்றாக இருக்கிறதே, இதை யார் பாடியிருப்பார்கள் என்று தேடும்போது தான் தெரியும் அது ஸ்வர்ணலதா பாடியது என்று. அப்படித்தான் அவர் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது.

மனதில் நிற்காத படங்களில் கூட அவர் பாடிய பாடல்கள் மனதிற்கு இனிமையாக இருந்தது. இப்படி தன் குரலால் எத்தனை பேரை வசியப்படுத்தி இருப்பார்.

ஆனால் இன்று ...அவர் இல்லை என்பதை நினைக்கும் போது...

அதுவும் இந்த சின்ன வயதில், எவ்வளவோ சாதனைகள் செய்ய வேண்டிய வயதில் அல்ப ஆயுசில் மறைந்து போனது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.

ஆழ்ந்த இரங்கல் என்றெல்லாம் ஒரு வார்த்தையில் முடிக்க முடியவில்லை. (அவர் இல்லை என்பதை நினைக்கும் போது).