Tuesday 18 January, 2011

தேர்தல் பண்பாடு

நம்ம ஊர் அரசியலைப் பொறுத்தவரை, ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி வேறு வேறு கட்சியில் இருந்தால் அதுவே குடும்பத்துக்குள் சண்டையாக மாறி அடிதடியில் முடிந்துவிடும் அளவுக்குப் போய்விடும்.


நம்ம ஊர் அரசியல் இப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.


ஆனால் இங்கிலாந்தில் எப்படித் தெரியுமா?


அங்கே ஒரே மேடையில் போட்டியிடுகிற இரு வேட்பாளர்களும் பேசுவார்களாம், பட்டிமன்றம் மாதிரி.


ஒருமுறை இது போன்ற ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வேட்பாளர் மக்கள் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கானக் காரணங்களை வரிசையாகச் சொல்லி, "ஆகவே எனக்கு வாக்களியுங்கள்" என்ற வேண்டுகோளோடு பேச்சை முடித்துக் கொண்டு தன் இருக்கைக்கு சென்றுவிட்டார்.


அதுவரை போட்டி வேட்பாளர் அங்கு வந்து சேரவில்லை. மக்களோடு முதலில் பேசிய வேட்பாளரும் காத்திருந்தார். அவர் வந்து சேர தாமதமாகியதால் முதலில் பேசியவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்று பேச ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா?


"என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் ஏனோ இன்னமும் வந்து சேரவில்லை. அதன் காரணமாக அவர் தனக்காக ஓட்டு கேட்கும் வாய்ப்பை இழந்து நிற்கிறார். அதனால் அவர் சார்பாக நான் பேச விரும்புகிறேன். அவர் தரப்பு நியாயங்களையும் நானே சொல்கிறேன்" என்று தொடங்கி.. எதிர்தரப்பு வேட்பாளருக்காகவும் இவரே பேசி முடித்திருக்கிறார்.


தேர்தல் பண்பாடு என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல, அங்கு ஓட்டுக் கேட்கும்போதே வெற்றியா? தோல்வியா? என்பதைக் கணித்துவிட முடியுமாம்.


ஒரு வேட்பாளர் வீட்டுக்கு முன்னால் நின்று, "எனக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்டால் "அதுக்கென்ன..பார்த்துச் செய்யறோம்" என்று வாசலிலேயே அனுப்பி வைத்து விடுவார்களாம். இப்படி வாசலிலேயே அனுப்பி வைப்பவர்களின் ஓட்டு நிச்சயம்.


வேறு சில வீடுகளில் வேட்பாளரை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காபி கொடுத்து அனுப்புவார்களாம். இந்த ஓட்டு நிச்சயமில்லாததாம். இந்த உபசரிப்பு, ஓட்டுப்போட போவதில்லை..இதையாவது செய்வோம் என்ற அனுதாபத்தில் தான் அப்படி நடந்து கொள்வார்களாம்.


தேர்தல் பண்பாடு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.


(செய்திகள்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய 'சிறகை விரிப்போம்!' எனும் நூலிலிருந்து)


நம்ம ஊர் அரசியல் நிலவரத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அய்யோ..யோசிக்கவே முடியவில்லை. நம் ஊரில் ஓட்டுக் கேட்கும் விதமே தனிதான். நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எந்த அளவுக்கு இரங்கிப் போகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மைதானோ!


இங்கே அரசியல் திருடர்களில் கொஞ்சமாகத் திருடுபவன் யாரோ? என்று தேடும் நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.