Tuesday 1 March, 2011

நாளை உங்கள் பெண்ணும் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்!


மகள்: "அம்மா, என்னம்மா இவ்வளவு பாத்திரங்கள்.. எதுக்கும்மா இதெல்லாம்?"


அம்மா: "இந்த பாத்திரங்களெல்லாம் உனக்கு சீர் செய்யத்தான்.."


மகள் அத்தனை பாத்திரங்களையும் கலைத்துப் பார்த்தாள்..


மகள்: "இதென்னம்மா.. தோசைக்கல் கூட வைத்திருக்காயே.."


அம்மா: "ஆமாம். உன் புருஷனுக்கு தோசை செஞ்சு கொடுக்க வேண்டாமா?"


மகள்: "அப்படின்னா அவரால தோசைக்கல் கூட வாங்க முடியாதாம்மா?"


அம்மா: "அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா.. இதெல்லாம் காலம், காலமாக நடக்கும் சம்பிரதாயம்"


மகள்: "ம்ம்.. சரிம்மா..இந்தப் பாத்திரங்களையெல்லாம் வைத்து நான் என்ன செய்ய?"


அம்மா: "என்னடி கேள்வி இது? உன் புகுந்த வீட்டில் வைத்து சமைப்பதற்கு பாத்திரங்கள் வேண்டாமா? அதற்குத்தான்...."


மக‌ள்: "ஏன் அவர்கள் வீட்டில் பாத்திரங்கள் இருக்காதாம்மா?"


அம்மா: "இருக்கும். இருந்தாலும் உனக்கென்று தனியாக எல்லாம் வேண்டாமா?"


மகள்: "எல்லாத்தையும் இப்போதே அவர்களும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், நீங்களும் தனியாக எனக்கென்று அத்தனையும் ஒதுக்கி விடுகிறீர்கள். அப்புறம் ஏன் கல்யாணத்துக்கப்புறம் என் மகனை மயக்கி தனியாக கூட்டிச்சென்று விட்டாள் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அம்மா? பக்கத்து வீட்டுல இருக்கிற ஜானகி அக்கா அழுதப்போ பாவமா இருந்துச்சும்மா..."


அம்மா: "!....!"