Friday 25 February, 2011

பெயரின் மீது காதல்!


அதென்ன பெயரின் மீது காதல்? ஒவ்வொருவருக்கும் முதல் அடையாளமாக இருப்பது நம்முடைய பெயர்தான். அந்தப் பெயரில்தான் எத்தனை விதம்? 


பெற்றோர்கள் வைத்தப் பெயர், நண்பர்கள் வட்டத்தில் ஒரு பெயர், பெற்றோர் வைத்தப் பெயர் பிடிக்காமல் போய் தாங்களாகவே வைத்துக்கொண்ட பெயர் என்று பெயர்களின் மீது உள்ள காதல் இதுவரை மட்டுமல்ல.. இனிமேலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


அந்தப் பெயரால் வந்த சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.


ஸ்ரீஅகிலா! இது என்னுடைய ஜாதகப்பெயர். ஆனால் இந்தப்பெயரை என்னுடைய சர்டிஃபிகேட்டில் கொடுக்காமல் வெறும் அகிலா என்று மட்டுமே கொடுத்தார்கள். 'அகிலா' இதன் முதலெழுத்து A என்று ஆரம்பிப்பதால் க்ளாஸ் ரூமில் முன்னாடி உட்கார வைத்து விடுவார்கள். (கொடுமை! க்ளாஸில் தூக்கம் வந்தால் தூங்கவே முடியாது) எக்ஸாம் ஹாலிலும் முதல் பெஞ்சில் உட்கார வைத்து ஒரு பிட்டு கூட அடிக்க முடியாமல் செய்து விடுவார்கள். 



வீட்டில் கூப்பிடுவது 'பேபி'என்றாலும் நல்லவேளை அந்தப்பெயரையே எனக்கு வைத்து விடவில்லை. (வைத்திருந்தால்..நான் பாட்டியான பிறகு 'பேபி பாட்டி' என்றுதான் கூப்பிட்டிருப்பார்கள். ஷ்ஷ்! கற்பனை செய்யவே முடியவில்லை)  


கண்கள் பெரிதாக இருந்ததால் என்னை 'முட்டக்கண்ணு' என்று கூப்பிட்டவர்கள் ஏராளம். அப்படி கூப்பிடுபவர்களை அதே முட்டைக்கண்ணை வைத்து முறைத்து விட்டு சென்றுவிடுவேன். அந்தக் கண்ணைக் கொடுத்ததற்காக கடவுளையும் திட்டியிருக்கிறேன். அந்த தாழ்வு மனப்பான்மை, அந்தக் கண்களுக்காகவே என்னை ஸ்கூலில், நடனத்தில் சேர்த்துக் கொள்ளும் போதும், அந்தக் கண்களை வர்ணித்து லவ்லெட்டர் வந்தபோதும் தானாக விலகிப்போனது.


நண்பர்கள் குழுவில் என்னை 'அகில், அகில்ஸ்' என்றெல்லாம் சுருக்கி கூப்பிடும்போது அந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதன் அர்த்தம் தெரிந்தபோது அதைவிட அந்தப்பெயரின் மீது காதல் வந்தது.


என் கணவரும் அடிக்கடி சொல்லுவார், "எனக்கு முதலில் ராஜாஜி என்றுதான் பெயர் வைக்கப்பார்த்தார்கள், ஆனால் நல்லவேளை 'ராஜ்குமார்' என்று வைத்து விட்டார்கள். தப்பித்தேன்!" என்று சொன்னார். பொதுவாக தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்துக்கொள்ள யாருக்கும் விருப்பமில்லை என்பது தான் உண்மை. அப்படி வைத்தாலும் அதையும் சுருக்கி ஸ்டைலாக வைத்துக்கொள்வது பலருக்கும் பிடித்தமான விஷயம். 


பிடிக்காத பெயரைப் பெற்றோர்கள் வைத்துவிட்டால் அதனால் வரும் தாழ்வு மனப்பான்மையும் அதிகம் தான். அனைவரும் கிண்டல் செய்வதாலேயே அந்த எண்ணம் வருகிறது என்று நினைக்கிறேன். 


வீட்டில் பெண், மாப்பிள்ளை பார்க்கும் நேரத்தில் கூட இந்தப் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பெயருக்காகவே பல வரன்களைத் தட்டிக்கழித்தவர்களும் ஏராளம். (அதுசரி அர்ச்சனா என்று வைத்தால் பிடிக்கும், அருக்காணி என்று வைத்தால் பிடிக்குமா?)


இப்போது அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்டைலாக பேர் வைப்பது கூட அதன் மீது உள்ள காதலால் தான். என் மகள் பிறந்த போதும் பெயர் பிரச்சினை தலை தூக்கியது. பெரியவர்கள் இப்படித்தான் வைக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். நட்சத்திரப் பெயர்தான் வைக்க வேண்டும் என்றும் சண்டை போட்டார்கள். நாங்கள் யாருக்கும் இசைந்து கொடுக்கவில்லை. 


அவரவர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி கூப்பிட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் இப்படித்தான் வைப்போம், சர்ட்டிஃஃபிகேட்டிலும் நாங்கள் வைக்கும் பெயர்தான் இருக்கும் என்று உறுதியாக இருந்தோம். 


அப்படி ஆசையாக என் மகளுக்கு வைத்தப் பெயர்தான் 'ரிஜூதா'. அவள் வளர்ந்து வரும் போது அது நல்லப் பெயராகவும், கொஞ்சம் ஸ்டைலாகவும்  இருக்க வேண்டும் என்றும் இந்தப்பெயரை வைத்தோம்.


ஆனால் அவளுக்கும் 'ரிஜூதா' என்ற முழுப்பெயர் ஸ்கூலில் தான் கூப்பிட வேண்டும். வீட்டிற்கு வந்தால் ரிஜூதான். இல்லாவிட்டால் ரகளைதான்.  அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் ரிஜூதா என்று கூப்பிட்டால் போதும். சிறு குழந்தைகளுக்கும் அவர்களின் பெயர் மீது உள்ள காதல் இங்கிருந்தே தொடங்கி விடுகிறது.


பதிவுலகத்துக்கு வந்தபிறகு முதலில் கவர்ந்ததும் பலருடைய பெயர்கள் தான். எத்தனையோ பேருக்கு தங்களுடைய பெயர்களால் வந்த சீண்டல்களும், சுவாரஸ்யங்களும் நிறைய இருக்கும். அதைப் பலரும் பகிர்ந்து கொள்ளலாமே, அதற்காக இதை தொடர்பதிவாக கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன்.


உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய பெயரால் வந்த சுவாரஸ்யங்களை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். 


இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது; (விருப்பமிருந்தால்)


சந்தன முல்லை  (இந்தப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருப்பதால்)