Monday 12 March, 2012

இது என்ன காதல்?

சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. இடமில்லாததால் நின்று கொண்டே வந்தேன். அப்போது ஒரு பெண் கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். இடமில்லாததால் அவளும் நின்று கொண்டே வந்தாள். அவள் நின்ற இடத்தில் புதுமணத் தம்பதிகள் சிரித்துப் பேசி உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தை அழுவதைப் பார்த்தும் அந்த தம்பதிகள் திரும்பி கூட பார்க்கவில்லை. அந்த ஆண் ஏதோ காதில் கிசுகிசுக்க, பெண் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே வந்தாள்.

பசியில் கத்திய குழந்தை அழுது, அழுது சோர்ந்து போனது. புதுமணத் தம்பதிகளாகவே இருந்தாலும் கூட ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? அந்த ஆணுக்குத்தான் அறிவில்லை...அந்தப் பெண்ணுக்கும் கூட அவனை எழுந்து இடம் கொடுக்கச்சொல்லும் மனமில்லாதது ஆச்சர்யம். இவளும் ஒரு பெண்ணா? என்றுதான் தோன்றியது. அப்படியென்ன ஒரு காதல்?

சக பயணியிடம் கூட மனிதாபிமானத்தை காட்ட முடியாதவர்கள் மற்றவர்களுக்கு என்ன பெரிதாக  உதவி விடப் போகிறார்கள்?

உதவி என்பது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நம்மால் முடிந்த இந்த சின்ன சின்ன உதவியில் தான் இருக்கிறது மனிதாபிமானத்தின் அடையாளம்.