Sunday 14 November, 2010

அவசரச் சட்டமும், அவசியமானப் பாதுகாப்பும் வேண்டும்

இரண்டு வாரங்களுக்கும் மேல் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. கோவையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு குழந்தை மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு அனுப்பும் போது கூடவே இருந்து கூட்டிக்கொண்டு வர வேண்டிய கட்டாயம். அதை எத்தனை நாள் தொடர முடியும்?


வேன் டிரைவரிலிருந்து அவருக்கு உதவியாக இருக்கும் ஆள் வரை அனைவர் மீதும் ஒரு சந்தேகப்பார்வையுடன் தான் இருக்க வேண்டியதிருக்கிறது. யாராவது குழந்தையுடன் சிரித்துப் பேசினால் கூட இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் என்னையுமறியாமல் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவள் படிக்கிறாளோ இல்லையோ பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.


கோவையில் நடந்தக் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அனைவரது மனதிலும் ஆவேசங்களும், வருத்தங்களும் இருந்தது. அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?


எல்லாத் தவறுகளையும் சுதந்திரமாக செய்ய முடிகிற வெளிநாட்டில் கூட குழந்தைகள் மீது கை வைத்தால் அதற்கானத் தண்டனை மிகக்கொடூரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் நம் குழந்தைகள் பாதுகாப்பில்லாத ஒரு உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.


குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை.


இத்தனைப் பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, இரண்டு கிரவுண்டு நிலம் வழங்குவதற்காக சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.