Tuesday 10 August, 2010

பாசம்! (ஒரு துக்க நிகழ்வு)

                      அந்த வீட்டுத் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டுப் பெண்மணி தான் எடுத்தார். பேசிவிட்டு வந்தவர் கணவனிடம், "கிராமத்திலிருந்து ஃபோன் வந்திருக்கு. என் கூடப் பிறந்த அண்ணன் சீனிச்சாமி இறந்துட்டானாம். நமக்கும், அவனோட பத்து, பதினெஞ்சு வருஷமா தொடர்பே இல்லாமப் போச்சு. என்ன பண்றது? கூடப் பொறந்துத் தொலைச்சுட்டானே" என்றார்.

                     கணவர், "இப்ப என்ன பண்ணலாம்? சாவுக்குப் போகலாமா, வேண்டாமா?".

                    "என்ன இப்படி கேட்டுட்டீங்க? என் கூடப் பொறந்தப் பொறப்பாச்சே. என்னால எப்படி அவன மறக்க முடியும்? இவ்வளவு சீக்கிரம் அவன் இறந்து போவான்னு நினைக்கவே இல்லை. அவசரப்பட்டு என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பேன். என்ன இருந்தாலும் என் அண்ணன் தானே. அவன் மேல் தப்பே இருந்தாலும் நானாவது பொருத்துப் போயிருக்கலாம். பாவம்! இப்பப் போய்ச் சேர்ந்துட்டானே. எல்லாமே உங்களால தான் போங்க." என்று இறந்த தன் அண்ணனுக்காகக் கண்ணீர் விட்டார் அந்தம்மா.

                    "சரி சரி. சீக்கிரம் கிளம்பு, போயிட்டு வந்திரலாம்.", கணவர் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

                   வெளியூரில் இருக்கும் தன் பிள்ளைகளுக்கு அந்தம்மா தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னார். "என் அண்ணன் போய்ச் சேர்ந்துட்டானேப்பா." என்று அழுதார். பிள்ளைகள் அம்மாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.

                  இருவரும் கிராமத்திற்குச் சென்றார்கள். கிராமத்தில் நுழைந்தவுடன், தன் அண்ணனை நினைத்து அழுதுகொண்டே சென்றார். எதிரில் தென்பட்ட உறவினர் மகனுடன் இருவரும் துக்கம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. இறந்த அண்ணனின் முகம் நன்றாகக் கருத்துப் போயிருந்தது. சிறிது நேரம் ஒருவிதக் குழப்பத்துடன் தன் அண்ணனைப் பார்த்து புலம்பியவர், "என்னப்பா, அண்ணனோட மகன்கள் யாரையுமேக் காணோம்?" என்று அருகில் இருந்தவரிடம் விசாரித்தார். அப்போதுதான் புரிந்தது, தான் வந்தது 'சீனிச்சாமி' என்ற பெயரில் உள்ள வேறு ஒரு உறவினரின் துக்க நிகழ்வுக்கு என்று.

                  தன் அண்ணனைப் பார்த்து பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இறந்த அந்த உறவினரும் தன் அண்ணனைப் போலவே இருந்ததால் கொஞ்சமல்ல, நிறையவே குழப்பமாகி விட்டது. ஏதோ வந்தது வந்துவிட்டோம், துக்க நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் கலந்து விட்டுப் போய் விடலாம் என்று அமைதியாக இருந்தனர் கணவனும், மனைவியும்.

                  அப்போது அதே கிராமத்தில் குடியிருந்த, இறந்ததாக நினைத்த அதே அண்ணன் எதிரே வந்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்தப் பெண்மணியின் கணவர், " வரும் போது உன் அண்ணனை நினைத்து அழுது கொண்டே வந்தாயே, போய்ப் பேசுகிறாயா? " என்றுக் கேட்டார்.

                 அவ்வளவுதான்! உடனே அந்தம்மா, " அவன் கிட்ட என்னப் பேச்சு வேண்டிக்கிடக்கு? அவன் பண்ணினக் கூத்துக்கு இங்க வந்ததேப் பெரிய விஷயம். அவனாச் சாவான்? இருக்கிறவங்களை எல்லாம் சாகடிப்பான். " என்றாரே பார்க்கலாம். கணவர் வாயடைத்து நின்றார்.

இல்லாத போது ஏங்கும் மனது, இருக்கும் போது தூற்றுவது ஏனோ?! கலிகாலம்டா சாமி!