Wednesday 22 September, 2010

சைக்கிள்!

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தினமும் ஒருமணி நேரம் சைக்கிள் ஓட்டிப் பழகிப் பார்க்கும்போது அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.


சைக்கிளை அரைகுறையாக ஓட்டும்போதெல்லாம் தட்டுத்தடுமாறி விழுந்துகொண்டே இருந்தேன். நான் விழுவதைப் பார்த்த அவன் கிண்டலாகச் சிரித்தான். சே...திமிர்பிடித்தவன்! மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு மேல் சைக்கிளை ஓட்ட விருப்பமில்லாமல் போய்விடுவேன்.

ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்க ஓடிவரும் போதும் இரண்டு முறை தொப்பென்று விழுந்திருக்கிறேன், அதுவும் அவன் முன்னாலேயே. "சைக்கிள் தான் வீக்-ன்னு நெனைச்சா காலுமா வீக்" நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு சிரித்தான். எல்லாம் நேரம்! எப்பப் பார்த்தாலும் இவன் முன்னாலேயே விழுந்து தொலைக்கிறோமே.. திமிர்பிடித்தவன் எப்படி சிரிக்கிறான்? நினைக்கும்போது எரிச்சலாக இருந்தது.

ஒருநாள் ஸ்கூல் லீவில் இருக்கும்போது ப்ரெண்ட் வீட்டுக்குப் போவதற்காக அரைகுறையாக ஓட்டத்தெரிந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஓட்டும்போது சைக்கிள் நேராகப்போகாமல் கொஞ்சம் கோணலாகப்போனது. எதிலாவது இடித்துவிடுவேனோ என்று நினைக்கும் நேரத்தில் சைக்கிளை விட்டு இறங்கி விடுவேன். அப்படியே கொஞ்ச தூரம் சைக்கிளைப் பிடித்து உருட்டிக்கொண்டே போவேன். அப்புறம் அதில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்சம் சுமாராக, நேராக ஓட்ட முடிந்தது.

அப்பாடா! ஒருவழியாக ஓட்ட முடிந்ததே.. இனி கொஞ்சம் நிம்மதியாக, மெதுவாகப் போகலாம்....

சைக்கிளில் மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும்போது, எதிரில் சைக்கிளில் ...யாரது? ஆ.. அவனேதான்! அந்தத் திமிர்பிடித்தவன் இங்கேயும் வந்துவிட்டானா? இப்போது நேராகப் போய்க்கொண்டிருந்த சைக்கிள் கொஞ்சம் அலம்பல் செய்தது. கவனமாக ஓட்ட வேண்டும். இவன் முன்னால் விழுந்து விடக்கூடாது..நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் சைக்கிள் மேல் மோதியே விட்டான். சைக்கிளோடு விழுந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தார்கள். அதில் ஒரு அம்மா என்னைத் தூக்கிவிட்டு, "பாப்பா, பாத்துப்போம்மா..." என்றார். உடனே அந்தம்மாவின் அருகில் இருந்தப் பெரியவர், "ஏம்ப்பா.. பொம்பளப்புள்ள அப்படி இப்படி வந்தாலும் நீ பார்த்துப் போகமாட்டியா? என்னப் புள்ள நீ" என்று அவனைப் பார்த்துக்கேட்டார்.

கையைக் காலை உதறிக்கொண்டு மறுபடியும் சைக்கிளில் ஏறும்போது, "ஏய்.. நில்லு.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னான் அவன். நான் அவன் பேச்சைக் காதில் வாங்கவேயில்லை. பெரிய இவன்! தள்ளிவிட்டுட்டு பேசணுமாம்... ஒருமுறை முறைத்துவிட்டு சைக்கிளில் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி ஓட்ட ஆரம்பித்தேன்.

சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் எப்படித்தான் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறானோ. ஒருவழியாத் தொலைஞ்சான். என்று மனதில் நினைத்துக்கொண்டு சைக்கிளை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! சைக்கிளை நன்றாக அழுத்தி, வேகமாக ஓட்டினேன். அவ்னும் வேகமாக வந்தான். விடுவேனா? என்ன ஆனாலும் சரி! இப்போதைக்கு சைக்கிளை விட்டு இறங்கக்கூடாது, ஒருமுடிவுடன் வேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை இப்போது லாவகமாகப் பிடித்து பேலன்ஸ் செய்ய முடிந்தது.

ஓட்டினேன்...ஓட்டினேன்... வேகமாக ஓட்டிக் கொண்டேயிருந்தேன். குவார்ட்டஸ் என்பதால் ஒவ்வொரு ப்ளாக்குக்கு உள்ளேயும் நுழைஞ்சு, நுழைஞ்சு ஓட்டிக்கிட்டே இருந்தேன். எந்தப்பக்கம் போனாலும் அவனும் பின்னாலேயே வந்துக்கிட்டிருந்தான். விடமாட்டான் போலிருக்கே.. சைக்கிளை ரொம்பவும் வேகமாக ஓட்டி சந்து, பொந்துக்குள் எல்லாம் நுழைஞ்சு ஒருவழியா என் ப்ரெண்ட் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். அவள் வீட்டில் ரொம்ப நேரம் இருந்துவிட்டுத்தான் திரும்பினேன்.

திரும்பி வரும்போது, சைக்கிளை ரொம்பவும் அழகாக, வேகமாக ஓட்ட முடிந்தது. நம்மால் இவ்வளவு வேகமாக சைக்கிள் ஓட்டமுடிகிறதே என்று முதன்முதலாக மனதில் இனம்புரியாத சந்தோஷம்!



அடுத்தடுத்த நாட்களில் நான் விழாமல் சைக்கிள் ஓட்டியதை அவனும் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

இப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன் சைக்கிளை.