Saturday 26 March, 2011

கொத்துங்க எஜமான்... கொத்துங்க!

"எங்க அப்பாவைக் கொன்ன அந்த நாலு பேரு யாரு?" இதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமா நாயகர்கள் தங்கள் அம்மாவையோ, ஆயாவையோ பார்த்து கேட்கும் கேள்வி. வில்லன்களின் கதையைக் கேட்டதும், 'ஒரு போங்கு புயலாகி வருதேய்ய்ய்ய்ய்ய் ஓஓஓஓ' என்று ஸ்பீக்கர்கள் காதைக் கிழிக்கும். ஆனால் வில்லனின் மகள் மட்டும் ஹீரோவிடம் கிறங்கி, மயங்கி, குத்தாட்டம் போடுவார்.


ரிவெஞ்ச் கதைகளில் வெரைட்டி காட்டியது 'அபூர்வ சகோதரர்கள்'. கோலிக்குண்டில் கொடூரக்கொலை, புலியை விட்டு குரல்வளையைக் குதறுவது, சர்க்கஸ் சிங்கத்தை வைத்து சட்னி ஆக்குவது என விதவிதமான கொலைகளை செய்வார் தம்மாத்துண்டு கமல்.


அம்மாவை கைவிட்டுப்போன அப்பாவை 'என்னம்மா கண்ணு செளக்கியமா?' என்று கேட்ட ரஜினிக்குப் பழைய படங்களில் ஆல்டைம் ட்யூட்டியே பழிவாங்குவதுதான். அப்பாவைக் கழுத்தறுத்தவன், தங்கச்சியைக் கற்பழித்தவன் என்று தீங்கு செய்யும் வில்லன்களை ஜெர்கின் அணிந்து பழி வாங்கினார் சூப்பர் ஸ்டார்.


எல்லா ஹீரோக்களும் சுயநினைவோடு பழிவாங்கியபோது சுற்றிச் சுற்றி பழிவாங்கிய 'கஜினி'யின் ரிவெஞ்ச் நிறையவே வித்தியாசம்.


ஆண்கள் எல்லாம் உயிரோடு பழிவாங்க, பெண்கள் ஆவியாக வந்து பழிவாங்குவார்கள். வெள்ளைச்சேலை, சாம்பிராணிப் புகை, மணக்கும் மல்லிகை இதுதான் ஆவிக்கு உரிய அடையாளம். சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடுவார்கள். அந்தப் பாடாவதி பாட்டுக்கே வில்லன்கள் தூக்கில் தொங்கலாம். அது சரி, ஆவிகள் மற்றவர்களை ப‌ழிவாங்குகிறதே...ஆவிகளால் பழிவாங்கப்பட்டு அகால மரணம் அடைபவர்கள் ஆவிகளாக மாறி யாரைப் பழிவாங்குவார்கள்?


இதுபோக, நண்பனைக் கொன்றவனை நாள் குறித்துப் பழிவாங்குவது, குடும்பத்தை அழித்தவனைக் குத்திக் கிழித்து பழிவாங்குவது, அத்திப்பட்டியை அழித்தவர்களை ஆள்வைத்துக் கடத்திப் பழிவாங்குவது என்று தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவும், சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடரும் பழிவாங்கும் படலம்.


இந்தியாவில் பாம்புகள் படம் எடுத்ததை விட பாம்புகளைப் பற்றி படம் எடுத்ததுதான் அதிகம். குஜாலாக இருக்கும் பாம்புகளைக் குருவி சுடுவதைப் போல சுட்டுவிடுவார் வேட்டைக்காரன். பெண் பாம்பு பிழைத்துப் பழிவாங்கும். சிட்டி, பட்டி எல்லாம் தேடி வந்து வில்லனை போட்டுத்தள்ளும். கொத்துங்க எஜமான்...கொத்துங்க! 


நண்பனின் எதிரி எனக்கும் எதிரியே என்கிற 'சுப்ரமணியபுரமும்', சேர்த்து வைத்தவர்கள் பிரிந்து விட்டால் பிரித்து மேய்ப்பது என்கிற 'நாடோடிகள்', இன்றைய 'ஈசன்' வரை தொட்டுத் தொடர்கிறது தமிழ் சினிமாவின் பழிவாங்கும் பாரம்பரியம்!


இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கொத்துக்கொத்துன்னு கொத்துவாய்ங்களோ தெரியல....




(செய்திகள் விகடனிலிருந்து)