Wednesday 18 August, 2010

மெட்டி ஒலி

எப்போது ஊருக்குச் சென்றாலும் வீட்டில் கழட்டி வைத்திருக்கும் மெட்டியை மறக்காமல் காலில் மாட்டிக் கொண்டு போய்விடுவேன். வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாமல் தான். இந்த முறை ஊருக்குச் செல்லும் போது அதை மறந்தேப் போய் விட்டேன். எப்போதும் அதைப் போட்டுக் கொள்ள ஞாபகப்படுத்தும் என் கணவர் இந்த முறை வீட்டில் நன்றாக வாங்கட்டும் என்று அவரும் விட்டுவிட்டார் போலும், மறந்தே போனார்.


வீட்டிற்குச் சென்றவுடன் காலில் மெட்டியைக் காணாமல் ஒரே திட்டு. அதைக் கழுவுவதற்காகக் கழட்டி வைத்தேன், மறந்தேப் போய்விட்டேன் என்று சமாளித்துப் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று அர்ச்சனை மேல் அர்ச்சனையாக விழுந்து கொண்டிருந்தது.

 "நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் மாப்பிள்ளை" என்று மாப்பிள்ளைக்கு அறிவுரை வேறு. "இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். அவள் தாலியைக் கழட்டி வைத்தால் கூட நான் ஒன்றும் சொல்லுவதில்லை." நல்லபிள்ளையாக சமயம் பார்த்து உசுப்பேற்றி விட்டார் என் கணவர். நான் அவரைப் பார்த்து முறைத்தேன்.

"தாலியை வேறு கழட்டி வைக்கிறாளா?" என்று மேலும் மேலும் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை. "மெட்டியைக் காலில் மாட்டினால் எனக்கு மிகவும் அலர்ஜியாகிறது" பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. தாலி, நெற்றியில் வைக்கும் குங்குமம், மெட்டி இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு முக்கியம் என்கிற ரீதியில் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது. சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம். உடனே அம்மா, "எப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்கிறாள். பாருங்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த டம்ளரை 'டொங்க்" என்ற சத்தத்துடன் வைத்தார். காது கிழிந்தது. சே... ஏந்தான் ஊருக்கு வந்தோமோ என்றிருந்தது.

கணவர், "நன்றாக மாட்டிக் கொண்டாயா?" என்று நக்கலாக என்னைப் பார்த்து சிரித்தார். அவருக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டார் பாருங்கள். கடுப்பாகத் தான் இருந்தது. சரி. சமாளித்தாக வேண்டுமே. என்ன செய்ய? "சரிப்பா. அலர்ஜியாகி, புண்ணாகி விட்டதால் போடாமல் விட்டேன். வேறொன்று வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. அதற்கு கூட அவர் எனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. நான் என்ன செய்ய?", கொஞ்சம் கண் கலங்கியவாறு அப்பாவிடம் கேட்டேன். அப்பா கொஞ்சமாகப் பரிதாபப்பட்டார். "மாட்டினீங்களா?" ஜாடையாகக் கேட்டேன் என் கணவரிடம். அப்பா, " மாப்பிள்ளை...." என்று இழுத்துக் கொண்டே கணவரிடம் திரும்பினார். அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளை என்பதால் கட்டாயம் அர்ச்சனைகள் விழப்போவதில்லை. நான் தப்பித்தேனடா சாமி என்று ஓட்டமாக ஓடி விட்டேன். அந்த நாள் மெட்டிச் சத்தத்தால் ஓய்ந்து போனது.

மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது என் கணவர், "மெட்டி வாங்கித் தர நேரமில்லைன்னு வீட்ல சொன்னேல்ல. ஒரு டஜன் மெட்டி வாங்கித் தர்றேன். இனிமே அதைக் கழட்டினேன்னு வை, அப்புறம் ஊர்ல இருக்கிறவங்களுக்கு ஃபோன் போட ஆரம்பிச்சிடுவேன். புரியுதா?" என்று கொஞ்சம் மிரட்டினார். "என்ன இருந்தாலும் உங்களை விட எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முற்போக்கு சிந்தனை கொஞ்சம் கம்மிதானே. அவங்கள என்னப் பண்றது?" ஆறுதல் சொன்னேன் அவ்ரிடம். பெருமூச்சு விட்டபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

எனக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் இந்த மாதிரி ஆபரணங்களில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வமுமில்லை, நம்பிக்கையுமில்லை. அது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். ஆரம்பத்தில் மெட்டியைப் போடவேக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.

திருமணத்தன்று மெட்டியைக் காலில் மாட்டும் போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது கொஞ்சம் லூசாக இருந்ததால் நடக்கும் போதெல்லாம் கழன்று வந்து விடும். மறுநாளே கழட்டி வைத்துவிட்டால் தவறாக நினைப்பார்களோ என்று விரலால் கவ்விக் கொண்டு கொஞ்சம் தத்தித் தத்தி நடந்தேன். மாமியார் வீட்டில் "சேலைக் கட்டிப் பழக்கமே இல்லையா. இப்படி நடக்கிறாய்" என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். தயக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன். "ஓ.. அப்படியா? சரி. சரி.. மாற்றி விடலாம்" என்று வேறொரு மெட்டியை வாங்கி வந்துக் காலில் மாட்டிவிட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை.

இதுவரை கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் என்று அனைத்து விதமான ஆபரணங்களும் போட்டுப் பழகியிருந்ததால் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் புதிதாகப் போட்டிருந்த மெட்டி கொஞ்சம், கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. நடக்கும் போதெல்லாம் கால் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்ததால் எரிச்சலாக இருந்தது. ஒரு ஆறு மாதக் காலம் அதை மாட்டிக் கொண்டே இருந்தேன். கால் விரல்களில் அரிக்க ஆரம்பித்தது. அதை மேலும் கீழும் அசைக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அந்த மெட்டியைக் கழட்டினேன். கழட்டி விட்டுப் பார்த்தால் மெட்டிப் போட்டிருந்த விரலில் புண்ணாகிப் போயிருந்தது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போடாவிட்டால் என்ன. என்று அதைத் திரும்ப மாட்டவே இல்லை.


ஆரம்பக்காலத்தில் மெட்டி என்பது திருமணமான ஆண்களுக்குத்தான் என்றிருந்ததாம். ஒரு பெண் திருமணமானவள் என்று அவளின் தாலியைப் பார்த்து எப்படி அடையாளம் தெரிந்துக் கொள்வார்களோ அதைப் போல ஒரு ஆண் திருமணமானவன் என்பதை அவன் காலில் அணிந்திருக்கும் மெட்டியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வார்களாம். (நான் சொல்வது அந்தக் காலத்தில்). ஆனால் காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் முற்போக்குத்தனமாக சிந்தித்தால் இந்தச் சமுதாயம் அவளைப் பழிப்பது மிகப் பெரிய வேதனை!

18 comments:

Deepa said...

/சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம்.//
செமத்தியான கேள்வி! :))

ச‌ரி, இதைப்ப‌டித்து விட்டு என்ன‌ நினைக்கிறாய் என்று சொல். இதே போல் முன்பு நான் எழுதிய‌து.
http://deepaneha.blogspot.com/2009/07/blog-post.html

நிலாமதி said...

இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே....

..உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரி. பெண்மை அன்று தொட்டு அடக்க பட்டு வருகிறது.ஆனால் இன்று சற்று விழிப்படைந்து விடார்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆரம்பம் படிக்கும் போது சிரிப்பு தான் வந்தது... ஆனால் கடைசியாக கூறிய விசயம் யோசிக்ககூடியாததாக இருக்கிறது...

துளசி கோபால் said...

நல்ல இடுகை.

நான் எல்லாம் கழட்டி திருப்பதி உண்டியலில் போட்டாச்சு கொலுசு உட்பட.

தாலிச்செயின்கூட பலநாட்களில் அணிவதில்லை.

எல்லாம் மனசுலே இருந்தால் போதும் என்ற நினைப்புதான்.

ராஜவம்சம் said...

சிறப்பானப்பதிவு வாழ்த்துக்கள்

//இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை//

மனசாட்சிய தொட்டு சொல்லுங்க ஒருத்தனோட முகறைய பார்த்தாலே தெரிஞ்சுடுங்க மாப்ளை மாட்டிகிட்டான்னு.

மாதவராஜ் said...

//ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். //

கொஞ்சம்தானா சலிப்பைத் தரும்?!!

இதனை சுமப்பது கணவர் மீது உள்ள அன்பினால் அல்லவென்று நினைக்கிறேன். இந்தக் குடும்பம், இந்த சமூகத்தின் பார்வை நம்மீது வித்தியாசமாய் விழுந்துவிடுமே எனும் பதற்றமே முக்கிய காரணமாய்ப் படுகிறது.

Unknown said...

எங்க வீட்டில் நான் தாலி கட்டாது திருமணம் செய்ததால் அந்த பிரச்சினை வந்தது இல்லை.. ஆனாலும் மனைவியை நீங்க கிறிஸ்டியனா? ன்னு எல்லோரும் கேட்க,
மெட்டி அணிய ஆரம்பித்தாள்... அப்போது நான் சிரிப்பேன்.. ஆனால் காலில் புண் வந்து இப்போது அணிவதில்லை..

மற்றவர்களுக்காக மாற ஆரபித்தால் நீங்கதான் சிரமபடுவீங்க... உங்க கணவர் ஒன்றும் சொல்லாதபோது..நீங்கள் நீங்களாக..இருங்கள்..

ஜெய்லானி said...

கேள்வியை கேட்டுட்டு அதுக்கும் நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க ..

//மற்றவர்களுக்காக மாற ஆரபித்தால் நீங்கதான் சிரமபடுவீங்க... உங்க கணவர் ஒன்றும் சொல்லாதபோது..நீங்கள் நீங்களாக..இருங்கள்.//

கே ஆர் பி செந்திலின் பதில் சரிதான்

MATHI said...

பெண்களுக்கு மெட்டி ,கம்மல் எல்லாமே
எதோ ஒரு மருத்துவ அடிபடையில் தான்
கொடுத்திருப்பதாக கேள்வி பட்டிருக்கேன் ..
அக்குபஞ்சர் தெரபி ...கொலுசு உடம்பிருக்கு குளிர்ச்சியை
தரும் ..வெள்ளியினால் ஆனதால் குளிரிச்சி. கல்யாணத்திற்கு பிறகு
உடல் நிலை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது னு பெரியவங்க சொல்வாங்க ...
இருந்தாலும் கஷ்டமாக தான் இருக்கு ..எல்லாவற்றியும் சுமக்க ...

Ramesh said...

உங்கள் கருத்துக்கள் நகைச்சுவையாகவும் அதே நேரம் சிந்திக்கும் விதமாகவும் இருக்கிறது..ஒரு பெண் தாலி கட்டியிருந்தால் சமுதாயத்தில் உங்களை மதிப்பாக பார்ப்பார்கள், மதிப்புடன் நடத்துவார்கள்..ஆனால் ஆண் மெட்டி போட்டு இருந்தால்..அவனது நிலை என்ன...மெட்டியுடன் அவனால் அலுவலகம் கூட செல்ல முடியாது இல்லையா..இப்படி கோத்துவிடறீங்களே...நியாயமா...

'பரிவை' சே.குமார் said...

அன்பின் நண்பரே...



வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

நன்றி.

நட்புடன்,
சே.குமார்.

http://vayalaan.blogspot.com

சௌந்தர் said...

காலையே இந்த பதிவை பார்த்தேன் தலைப்பை பார்த்த உடன் இது சீரியல் என்று ஓடி விட்டேன்....இப்போது வந்து படித்தேன் சிரிப்பு வந்தது கடைசியா சொன்ன விசயம் உண்மைதான்

hamaragana said...

அன்புடன் சகோதரிக்கு வணக்கம் மெட்டி போடுவது பற்றி மிகவும் சலிப்பாக சொல்லி உள்ளீர்கள்.. உண்மையல் மெட்டி போடும் அந்த விரலுக்கும் பெண்களின் கருப்பைக்கும் நரம்பு தொடர்பு உண்டு
திருமணம் முடிந்த வுடன் மெட்டி போடுவதால் அந்த விரல் மூலம் நரம்பு.தூண்டப்படும் அரோகியமான முட்டை உருவாகும் நல்ல சந்ததி உருவாகும் இன்னும் ஒவ்வொரு அணிகலுனுக்கும் ஒரு பயன்பாடு உண்டு .. நமது முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை !!!...தாங்கள் இது போன்ற அறிவார்த்த விஷயங்களை மூட நம்பிக்கை என ஒதுக்கும் நபர் எனில் தயவு செய்து மன்னித்து விடுங்கள் உங்கள் வலை தளத்திற்கு வந்தமைக்ku

அரிஅரவேலன் (Ariaravelan) said...

பண்பாட்டைக் காக்க வேண்டியவள் பெண் என்னும் ஆதிக்கச் சிந்தனை ஆண், பெண் இருவர் மனதிலும் ஆழமாகப் பதிக்கப்பட்டிருப்பதன் விளைவுதான் உங்கள் கால் விரலில் மெட்டியைக் காணாமல் உங்கள் தந்தையும் தாயும் பதறியதற்குக் காரணம். இந்த பதற்றம் தம் மகளைப் பற்றி மற்றவர்கள் ஏதேனும் கூறிவிடுவார்களோ என்னும் தேவையற்ற அச்சத்தின் விளைவு. எனவே அவர்களின் அச்சம் பொருளற்றது என்பதனை அவர்களுக்கு உணர்த்துவதேப் பொருத்தமான வழி. எனவே இது போன்ற சூழல்கள் ஏற்படும் பொழுது எதையேனும் கூறிச் சமாளிக்காமல் இதனை ஏன் செய்ய வேண்டும், செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என தொடர்ந்து – மோதலைத் தவிர்த்து, ஆனால் உறுதியாக – வினவுவதன் வழியாகவே மாற்ற முடியும். இவ்வாறு வினவும் பொழுது முதலில் எதிர்ப்பார்கள்; அடுத்து மறுப்பார்கள்; அதன் பின்னர் குழம்புவார்கள்; தொடர்ந்து கிண்டல் செய்வார்கள்; அப்புறம் அமைதியாவார்கள்; கடைசியில் ஏற்பார்கள். இதுதான் எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படை. எனவே அடுத்தமுறை அம்மா வீட்டிற்கு போகும் பொழுது அகத்துக்காரர் நினைவூட்டினாலும் மெட்டியை அணியாதீர்கள்; பொற்றோர் பதறினால் நிதானமாக அதனை ஏன் போட வேண்டும் எனக் கேளுங்கள்.

அகிலா,

உங்களுக்கு எழுத்தோட்டம் இருக்கிறது. முயன்றால் அதனைப் பண்படுத்த முடியும். ஆங்காங்கே இலக்கணப் பிழைகள் இருக்கின்றன. அவற்றை முறையாக இலக்கணம் படித்துத் திருத்திக் கொள்ள வேண்டும். உங்களின் இதுபோன்ற பதிவுகள் தமிழில் உருவாகிவரும் பெண்மொழிக்கான பங்களிப்பாக இருக்கும் வாழ்த்துகள்.

Unknown said...

நீங்க நீங்களா இருங்க

Prathap Kumar S. said...

//காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் //

அப்படி இருக்காது...அணிகலன் என்ற மோகத்தில் பெண்களே அதை வாங்கி போட்டுகொண்டிருக்கலாம்....

//ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை//

சிரிப்பு....கல்யாண ஆனவர்கள் அதிகம் சிரிப்பதில்லை...கடைசில திருமணபோட்டோவில் சிரிப்பதுதான்...:))

துளசி கோபால் said...

//கல்யாண ஆனவர்கள் அதிகம் சிரிப்பதில்லை...கடைசில திருமணபோட்டோவில் சிரிப்பதுதான்...:))//


அப்ப மூஞ்சைப் பார்த்தால் தெரிஞ்சுருங்கறீங்க!!!!!

ஆஹா......:-)))))))))

Anonymous said...

Right with this particular write-up, I personally expect this website wishes far more factor. I’ll oftimes be repeatedly to grasp more, great that tips.